ரஞ்சன் ராமநாயக்க மீதான தீர்ப்பு அசாதாரணமானதும், பாரதூரமானதுமானதென நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கில் நேர்மையானதொரு அரசியல்வாதியின் சார்பில் தாம் அவ்வழக்கினை முன்னெடுத்ததில் பெருமையடைகிறேன். துரதிஷ்டவசமாக அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு வருட கடூழிய தண்டனை விதிக்கப்பட்டது அசாதாரணமானதும் பாரதூரமானதொரு நிகழ்வு. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக சட்டங்கள் இயற்றப்படாத காரணத்தினால் பாராளுமன்றம் இதற்கு பொறுப்பு கூற வேண்டியது அவசியமானது என்றார்.
நீண்ட காலமாக இவ்வாறான நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்கள் இயற்றப்பட வேண்டிய தேவையிருந்தும், பொதுநல நோக்கோடு அநேக வரைபுகள் வரையப்பட்டும் சட்டங்கள் இயற்றப்படவில்லை. எனவே காட்டுக்கழுதைக்கு கிடைத்த சுதந்திரம் போல எவரும் எதனையும் தீர்ப்பளிக்க கூடியதொரு சூழ்நிலை காணப்படுவதின் பாரதூர தன்மையினையும் விளக்கினார்.
மேலும் உள்ளூர் சட்டங்கள் இயற்றப்படாத நிலையில் ஆங்கிலேய சட்டங்களே கணிசமான அளவில் நடைமுறையில் கடைபிடிக்கப்படுவதாலும், அதிலும் நீதிமன்ற அவதூறு ஒரு குற்றமாக தற்போது கணிக்கப்படுவதில்லை என்பதனை கருத்தில் கொள்ளாது, குறித்த தீர்ப்பினை அளித்தது தவறானதொரு போக்கு என்பதே தமது நிலைப்பாடு என்பதனையும் தெரிவித்தார்.
மேலும் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்கள் இயற்றப்படுவதில் இருக்கும் வெற்றிடமானது நேர்மையானதொரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அசாதாரணமுறையில் அநீதி இழைக்கப்பட வழி வகுத்துள்ளது என்பதனையும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ரஞ்சன் ராமநாயக்க விவகாரம் தீவிர பேசுபொருளாக இருந்தது.
கொலையாளியான பிரேமலால் ஜயசேகர தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்திருக்க வேண்டும், 7 ஆண்டுகள் அவர் வாக்களிக்கும் உரிமையை இழந்திருக்க வேண்டுமென்பதை தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசநாயக்க சுட்டிக்காட்டினார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.