போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர்களான மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த 27ஆம் திகதி அழைப்பானை அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
எதிர்வரும் 02ஆம் திகதி காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் ஊடாக இந்த அழைப்பானை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் மற்றும் ஜனநாயப்போராளிகள் கட்சியின் உபதலைவர் நா.சங்கரப்பிள்ளை,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கு இந்த அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர் திலீபன் என்பவரை நினைவு கூரும் முகமாக இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் அல்லது அவர்களினால் நியமிக்கப்பட்ட நபர்களினால் விளக்கு ஏற்றும் நிகழ்வினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டமை தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் தம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன் மற்றும் ஜனநாயப்போராளிகள் கட்சியின் உபதலைவர் நா.சங்கரப்பிள்ளை ஆகியோர் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளனர்.