கண்டி - பூவெளிக்கடை பகுதியில் இடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இடிபாடுகளில் சிக்கி ஏற்கனவே உயிரிழந்த குழந்தையின் பெற்றோரோ இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை குறித்த 5 மாடிக்கட்டிடம் இடிந்து அதன் அருகில் உள்ள வீடொன்றின் மீது வீழ்ந்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இந்த அனர்த்தத்தில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கியிருந்த நிலையில் அவர்களில் 2 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தனர்.
எனினும் குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டிருந்ததுடன் அதன் பின்னர் குழந்தையின் தாய் தந்தையும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த கட்டிடம் நிலையற்ற நிலத்தில் அமைக்கப்பட்டமையின் காரணமாகவே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக புவி சரிதவியல் ஆய்வாளர் சமந்த குமார போகாபிட்டிய தெரிவித்தார்.
இது தொடர்பில் எமது செய்தி பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள 3 வீடுகளில் வசித்தவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்காலிகமாகவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.